முன்னோக்கு

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக துருக்கியில் சோசலிச சமத்துவக் கட்சி நிறுவப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் துருக்கியப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சி –  நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருமையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறது.

துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பகுதி ஸ்தாபிக்கப்பட்டமை, மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். 1933ல் புயாகடா (பிரின்கிபோ) தீவில் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், துருக்கியில் சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கட்சி உருவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

துருக்கிய பகுதியின் ஸ்தாபிதம் என்பது, தத்துவார்த்த, வரலாற்று மற்றும் அரசியல் தெளிவுபடுத்தலின் ஒரு தீவிரமான மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சிப்போக்கின் விளைவாகும். துருக்கியில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியை உருவாக்குவதற்கான அடித்தளங்கள் மறைந்த தோழர் ஹலீல் செலிக்கால் அமைக்கப்பட்டன. ICFI உடனான ஹலீலின் தொடர்புகளும், அதன் துருக்கியப் பிரிவை கட்டியெழுப்புவதற்கான அவரது அர்ப்பணிப்பும், பல்வேறு வகையான பப்லோவாத சந்தர்ப்பவாதத்துடன் பல வருட வேதனையான அனுபவத்திலிருந்து பெறப்பட்ட அவரது முடிவிலிருந்தும், இந்தப் போக்குகளுக்கு எதிரான ஒரு கடுமையான அரசியல் போராட்டம் அவசியம் என்ற அவரது உறுதிப்பாட்டிலிருந்தும் உருவானது.

2014 ஆம் ஆண்டில், நான்காம் அகிலத்தின் வரலாற்றில் இளம் சோசலிஸ்டுகளின் ஒரு குழுவிற்கு கல்வியூட்டத் தொடங்கிய தோழர் ஹலீல், துருக்கியில் அதன் பகுதியை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. இதன்பின்பு, 2018 ஆம் ஆண்டில் சோசலிச சமத்துவக் குழு (Socialist Equality Group) உருவாக்கப்பட்டது.

ஹலீல் செலிக் (1961-2018)

அனைத்துலகக் குழுவின் முக்கிய வெளியீடுகளை துருக்கிய மொழியில் மொழிபெயர்க்கும் பணியை ஹலீல் மேற்கொண்டார். அவர் பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கமும், சோசலிச இயக்கமும் பொதுவாக பல தசாப்தங்களாக ஸ்ராலினிசம், மாவோயிசம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத போக்குகளால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டுவரும் ஒரு நாட்டில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதில் இந்த புத்தகங்கள் பிரதான முக்கியத்துவத்தை வகித்து வருகின்றன. துருக்கிய மொழியில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட சமகால மார்க்சிச இலக்கியத்தின் வெளியீடுகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிய பகுதியைக் கட்டியெழுப்புவதற்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தை அமைப்பதற்கு பங்களிப்பு செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

டிசம்பர் 31, 2018 அன்று, ஹலீல் அகால மரணம் அடைந்த போதிலும், அதற்குள் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருந்த சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு காரியாளரை ஹலீல் நியமித்து, அவருக்கு கல்வியூட்டியிருந்தார்.

ஜூன் 2022 இல், சோசலிச சமத்துவக் குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேருவதற்கான அதன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்த விண்ணப்பத்தை ஊக்குவிக்கும் தீர்மானம் பின்வருமாறு கூறியது:

எந்தவொரு நாட்டிலும் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு சர்வதேச முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் கட்சியின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும். உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில், ஒரு முக்கியமான சூழ்நிலையில் இருக்கும் துருக்கி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு உலக சோசலிசப் புரட்சி மட்டுமே ஆகும். துருக்கியில் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருப்பதானது, மாபெரும் வரலாற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியை மேற்கொண்டுள்ள ஒரே அரசியல் போக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகளாவிய விரிவாக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

சோசலிச சமத்துவக் குழுவின் விண்ணப்பத்தை அனைத்துலகக் குழு ஏற்றுக்கொண்டது. இது, துருக்கிய தோழர்களுக்கு முன்னால் புதிய பகுதியின் வரலாற்று அடித்தளங்கள் மற்றும் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான சவாலை முன்வைத்தது. துருக்கியில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி ஒருபோதும் இருந்ததில்லை என்பதால், இதற்கு மிகவும் துல்லியமான அரசியல் பணி தேவைப்பட்டது. இது, நான்காம் அகிலத்தின் வரலாற்றை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்லாமல், துருக்கியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முகங்கொடுக்கும் சிக்கலான அரசியல் மற்றும் மூலோபாய பிரச்சினைகள் குறித்த ஒரு பகுப்பாய்வு மற்றும் விளக்கத்தையும் கோரியது.

இந்த தத்துவார்த்த பணியைத் தொடர்கின்ற அதேவேளையில், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் பணிகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி, அனைத்துலகக் குழுவின் விமர்சன படைப்புகளை வெளியிடுவதற்கான அதன் இலட்சியத் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவக் குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் பிரசன்னத்தை விரிவுபடுத்த முக்கியமான அரசியல் முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு தொடங்கி, லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் பணிகளை நினைவுகூரும் வகையில், புயுகடா தீவில் வருடாந்திர கூட்டங்களை SEG ஏற்பாடு செய்தது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்தது.

ஏப்ரல் 2025 இல், அனைத்துலகக் குழுவானது சோசலிச சமத்துவக் குழுவை, சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றுவதற்கும், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் ஒரு பகுதியாக அதை அங்கீகரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்க வாக்களித்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் (துருக்கி) வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்ற தலைப்பில் அமைப்பின் ஆவணத்தை கவனமாக மதிப்பாய்வு செய்ததை அடுத்து, இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) - நான்காம் அகிலம், அதன் ஸ்தாபக காங்கிரஸை ஜூன் 13-15, 2025 அன்று இஸ்தான்புல்லில் நடத்தியது. வரலாற்று ஆவணத்திற்கு மேலதிகமாக, சோ.ச.க. அதன் கொள்கைகள் பற்றிய அறிக்கையையும் அரசியலமைப்பையும் ஏற்றுக்கொண்டது. துருக்கிய சட்டத்தின்படி, சோசலிச சமத்துவக் கட்சி - நான்காம் அகிலம், அரசால் ஒரு கட்சியாக முறையான அங்கீகாரத்திற்காக அங்காராவில் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதிகாரப்பூர்வ சான்றிதழ் ஆகஸ்ட் மாதம் பெறப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபகத்தை அறிவிக்கும் ஒரு காணொளி அறிக்கையில், அதன் தேசியத் தலைவர் உலாஸ் செவின்க் பின்வருமாறு தெரிவித்தார்:

சோசலிச சமத்துவக் கட்சி, இதர அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் உள்ளது. நாம் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் பாகமாக இருக்கிறோம். நாம் சகல வடிவிலான தேசியவாதத்தையும் நிராகரித்து, உலகளவில் பொதுவான நலன்களையும் எதிரிகளையும் கொண்டுள்ள தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுகிறோம். சமூகத்தில் அடிப்படைப் பிளவு வர்க்க அடிப்படையிலானது என்பதை உணர்ந்து, குட்டி-முதலாளித்துவ அடையாள அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம்.

மனிதகுலம் முகங்கொடுக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளும் முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து எழும் உலகளாவிய பிரச்சினைகளாகும். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களில் ஒன்று உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடமையும், மற்றொன்று உலகத்தை பொருளாதார ரீதியாக காலாவதியாகிப் போன தேசிய அரசுகளாகப் பிரிப்பதாகவும் இருப்பதால், இதற்கான தீர்வுகளும் சர்வதேசிய ரீதியாக இருக்க வேண்டும். ஒரு சர்வதேச வர்க்கமாக இருக்கும் தொழிலாள வர்க்கம் மட்டுமே, இந்தத் தீர்வுகளைச் செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரேயொரு சமூக சக்தியாகும். ஒரு “பன்முக” முதலாளித்துவ உலகத்தைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியப் போருக்கும் இனப்படுகொலைக்கும் வழிவகுக்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கு மாற்றாக, எல்லைகளை ஒழித்துக்கட்டும் உலகத் தொழிலாளர் அரசுகளின் கூட்டமைப்பு இருக்கும்.

காஸாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையானது, முதலாளித்துவ அமைப்பு முறையின் காட்டுமிராண்டித்தனத்தையும், அதைப் பாதுகாக்கும் அனைத்துக் கட்சிகளின் சிதைவையும் மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

இதர முக்கியமான பிரச்சினைகளைப் போலவே, பாலஸ்தீனிய பிரச்சினையும் தற்போதுள்ள முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்குள் தீர்க்கப்பட முடியாது என்பது தெளிவாகிவிட்டது. இது, ஒரு சர்வதேச பிரச்சினையாக இருக்கும் குர்திஷ் பிரச்சினைக்கும் பொருந்தும். இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே செல்லுபடியாகக்கூடிய, முற்போக்கான தீர்வு மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்பு ஆகும். அது, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவதன் மூலம் ஸ்தாபிக்கப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சி “குறைந்த தீமை” கொள்கையை ஐயத்திற்கிடமின்றி நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுகிறது. இதன் அர்த்தம், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அடிபணியச் செய்யும் வர்க்க-ஒத்துழைப்புவாத “மக்கள் முன்னணி” அரசியலை அடியோடு நிராகரிப்பதாகும்.

அவற்றின் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் இரண்டு அடிப்படை பிரச்சினைகளில் முழுமையாக உடன்பட்டுள்ளன: ஒன்று, ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதம். இந்தக் காரணத்திற்காகவே, குர்திஷ் பிரச்சினை உட்பட எந்த அடிப்படை அரசியல் பிரச்சினைகளையும் அவர்களால் தீர்க்க முடியாது. அவர்களால் ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிக்கவோ, சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தவோ அல்லது ஏகாதிபத்திய விரோத வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றவோ முடியாது. லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கியதைப் போல, சோசலிசத்திற்கான போராட்டத்தில் இந்தக் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகின்றன. அதாவது, ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ ஸ்தாபனக் கட்சிகளையும், அவர்களுடன் ஒத்துழைப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று கூறும் போலி-இடது கட்சிகளையும் நிராகரிக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியை தங்கள் சொந்த புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு “வரலாற்றுக் கட்சி” ஆகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் செவ்வியல் மார்க்சிச மரபிலும், அத்துடன் 1917 அக்டோபர் புரட்சியின் மரபிலும் எமது கட்சி நிற்கிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1923 இல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஏகாதிபத்தியத்துடனான கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் “அமைதியான சகவாழ்வின்” நலன்களுக்காக புரட்சியைக் காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்தை சீர்திருத்தும் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டம் தோல்வியடைந்த சமூக ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கும் தோல்விக்கும் தவிர்க்க முடியாமல் சரணடைவதில் முடிவடையும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராகவும் இந்த மரபைப் பாதுகாத்து வளர்த்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நோக்கம், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான ட்ரொட்ஸ்கியின் பின்வரும் அறிக்கையில் சுருக்கமாக கூறப்படுகிறது: அது, “... சோசலிசப் புரட்சியின் மூலமாக உழைக்கும் மற்றும் சுரண்டப்பட்டுவரும் மக்களின் முழுமையான சடரீதியான மற்றும் ஆன்மீக விடுதலை.”

மனிதகுலம் முழுவதின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்தப் போராட்டத்தில் எங்களுடன் சேருங்கள். sosyalistesitlikpartisi.org ஐப் பார்வையிடவும், எங்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, கட்சியில் சேரவும்!

துருக்கியில் சோசலிச சமத்துவக் கட்சியின் அடித்தளம், உலகளாவிய புவிசார் அரசியலின் மட்டுமல்ல, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய மூலோபாய கட்டத்தில் நிற்கும் ஒரு நாட்டிற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பணியை விரிவுபடுத்துகிறது. முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தில், துருக்கியின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த பல தேசிய இனங்களிலுள்ள பாட்டாளி வர்க்கம் மிகப்பெரிய பங்கை வகிக்கப் போகிறது.

அனைத்திற்கும் மேலாக, துருக்கியில் நமது தோழர்கள் நிரந்தரப் புரட்சியின் பதாகையை உயர்த்துவது, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் “எழுச்சி பெற்றுவரும்” நாடுகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் புதிய தலைமுறை தொழிலாளர்களையும் மிகவும் கொள்கைப் பிடிப்பான கூறுகளையும் ஊக்குவிக்கும்.

ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, மக்களின் ஜனநாயக அபிலாஷைகளையோ அல்லது சமூக நலன்களையோ பூர்த்தி செய்ய இயலாமையிலுள்ள தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் திவால்நிலை, மனிதகுலத்தின் எதிர்காலம் சோசலிசப் புரட்சியையும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதையும் சார்ந்துள்ளது என்ற நான்காம் அகிலத்தின் வலியுறுத்தல், ஒவ்வொரு நாளும் நிரூபணம் ஆகி வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி நீடுழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நீடுழி வாழ்க!

உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுங்கள்!

Loading